19 Feb 2016

ரயில்வே பாதுகாப்புப் படைக்கு 2030 பெண் கான்ஸ்டபிள்கள் தேவை 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (ஆர்.பி.எஸ்.எஃப்.) பிரிவுகளில் பெண் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2030 பெண் கான்ஸ்டபிள்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில், ஆர்.பி.எஃப். பணிக்கு 1827 பேரும், ஆர்.பி.எஸ்.எஃப். பணிக்கு 203 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் கான்ஸ்ட பிள்களுக்கு தெற்கு ரயில்வே உள்பட 9 மண்டலங்களில் உள்ள பெண்கள் பட்டாலியனிலும், ஆர்.பி.எஃப் படைப் பிரிவிலும் பணி வழங்கப்படும். 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி கொண்ட பெண்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


1.7.2016 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 152 செ.மீ. உயரம் இருந்தால் போதுமானது.

எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவப் பரிசோதனை மற்றும் என்.சி.சி., விளையாட்டு சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு தரவரிசைப் பட்டியல்படி தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும். அதில் 50 கேள்விகள் பொது விழிப்புணர்வு, 35 கேள்விகள் ஜெனரல் இன்டலிஜென்ஸ் மற்றும் ரீசனிங், 35 கேள்விகள் அரித்மேட்டிக் பிரிவுகளில் இருந்து கேட்கப்படும். வினாக்களுக்கு தவறான விடை அளித்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுவை உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேர்வு மையம் அமைக்கப்படும்.

http://rpfonlinereg.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 1.3.2016.

கூடுதல் விவரங்களுக்கு www.scr.indianrailways.gov.in, www.rpfonlinereg.in ஆகிய இணைய
தளங்களைப் பார்க்கலாம்.